திங்கள், 27 செப்டம்பர், 2010

காதல் பாடம்

அவளை அலுவலகத்தில் முதல் நாள்
பார்த்ததில் இருந்தே அவன் 
பசி மறந்தான்          
தூக்கம் தொலைத்தான்

 விடுப்பே எடுக்காமல் அவனுடைய
அலுவலக நாட்கள் கரைந்தன.

அவள் விடுப்பில் சென்ற பொழுது
அவளைக் காண முடியாமல் அவன் கண்கள் மட்டுமல்ல இதயமும்  கனத்தது.

அவள் ஓரக் கண்ணால் அவனைப்  பார்த்து
புன்னகையை வீசிய போதெல்லாம்
அவன் இதயம் ஒவ்வொரு முறையும் கீழே நழுவியது.

மதிய உணவை இருவரும் பங்கிட்டுக் கொண்டபோது
 இது போன்றதொரு உன்னதமான காதல் உலகில் இல்லை
என்று அவனுக்குளேயே கூறிக் கொண்டான்

அவளை  இருசக்கர வாகனத்தில் 
பின்னால் உட்காரவைத்து நகரை 
வலம் வந்த போது
காதல் அவனை இன்னும்
கொஞ்சம்  இளைஞனாக்கியது.
   
அவளை நினைத்து உருகி கவிதைகள் 
எழுதிய போது காதல் அவனை  கவிஞனாக்கியது

தெருவில் நடந்த சண்டையை விலக்கி
சமாதனம் செய்த போது காதல் அவனை
சமுதாயத்தின் காவலானக்கியது.

அதே தெருவில் மறுநாள் அவளை சீண்டிய இருவரிடம் 
அவன் சண்டையிட்ட  போது காதல் அவனை வீரானக்கியது

 திடீரென்று  அலுவலகத்தில் ஒரு நாள் அவள்
 திருமண அழைப்பிதழை  நீட்டிய போது
அவன் அதிர்ச்சியுடன் வாழ்த்துக்களைக் கூறி
 கழிவறைக்குள்  போய் தாழிட்டுக்கொண்டு
  ' ஒ'வென்று அழுதான்.

காதல் இன்று அவனை கோழையாக்கியது 

திங்கள், 20 செப்டம்பர், 2010

முரண்பாடுகள்

சென்ற வாரம் ஒரு நாள் என் நண்பர் ஒருவர் வீட்டிற்கு  சென்று இருந்தேன்.நான்  வீட்டிற்குள் நுழைந்த போது, அவர் வீட்டில் இருந்த குழந்தை அவரிடம் கதை சொல்லவா என்றது.அவரும் சரி என்றார். 'கடைசியில முயல் தோத்துப்  போச்சாம்' குழந்தையும் முயல் ஆமை கதையை சொல்லி முடித்தது.நண்பரும் 'ஒ அப்படியா' என்று முகத்தில் பொய்யான ஆச்சர்யத்தைக் காண்பித்தார்.குழந்தையை உள்ளே அனுப்பிவிட்டு வந்தவர், என்னிடம் அந்தக் கதையைப் பற்றி பேச ஆரம்பித்தார்.முயலும் ஆமையும் இரண்டு வெவ்வேறான குணாதியசங்களை கொண்ட உயிர் இனங்கள்.இரண்டும் சமமானவை அல்ல.அப்படி இருக்கும் போது  இரண்டுக்கும் எப்படி போட்டி?.மிகவும் முரண்பாடான ஒரு செயல் அல்லவா இது? என்று கேள்வியை எழுப்பினார். நான் அவரிடம் இது முரண்பாடான ஒரு கதையாக இருந்தாலும் ஒரு கற்பனைக் கதை தானே என்றேன்.ஆனால் நண்பரோ தன்னால் இதை ஏற்க முடியவில்லை என்றார்.எனக்கு புறப்படுவதற்கான நேரம் வந்துவிட்டது.ஆகையால்   மேலும் இதைப் பற்றி  பேச இயலாமல் நண்பரிடம் விடை பெற்று வெளியே வந்து என்னுடைய வேலைகளை எல்லாம் முடித்த பிறகு நண்பர் கூறிய அந்த முரண்பாடுகளைப் பற்றி யோசித்தேன்.

நாம் தினசரி வாழ்க்கையில் எத்தனையோ முரண்பாடான விஷயங்களை பார்க்கிறோம் ,பேசுகிறோம் ஏன் ஏற்றுக் கொள்ள கூட பழகி விட்டோம் என்பதுதான் உண்மை. 
தினமும் செய்தித்தாளை பிரித்தால் தென்படும் ஒரு செய்தி. தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணி என்றும்  தேர்தலுக்கு பிறகு வேறொரு  கூட்டணி என்றும் பிரித்து வைத்துக் கொண்டு பதவிகளை பங்கு போட்டுக் கொள்ளும் இன்றைய அரசியல்.இதுவும் ஒரு வகையில் முரண்பாடுதானே.

சொத்துக்கள் குடும்பத்தை விட்டு வெளியே செல்லாத வண்ணம் அல்லது இருப்பதை பல மடங்காக பெருகச் செய்வதற்கு அதே போல் சொத்துள்ள குடும்பம் என்று சம்பந்தவட்டவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாமலே சொத்துகளுக்க்காகவே செய்து வைக்கபடும் திருமணங்கள் இன்று ஏராளம்.இதுவும் முரண்பாடுதானே.

கல்லூரியில் படித்து முடித்து விட்டு வருபவனுக்கு அதற்கேற்ற வேலை கிடைப்பதில்லை.பொருளாதாரச் சூழ்நிலை அவனை துரத்த,படிப்புக்கு சற்றும் சம்பந்தமே இல்லாத ஒரு பணியில் சேருகிறான்.அவனுடைய .இதுவும் முரண்பாடுதானே.

இன்றைய நவநாகரிக உலகில் முறையற்ற உறவுகள் பெருவிட்டன. இதை மறைக்க கொலைகளும் அரங்கேற்றப்படுகிறது என்பதுதான் மிகவும் கொடுமையான விஷயம்.

இப்படி எத்தனையோ முரண்பாடான வாழ்க்கையை பட்டியலிட்டால் இந்தக்  கட்டுரையின்  நீளம் அதிகமாகிவிடும்.

அந்தக் கற்பனையான முயல் ஆமைக் கதை இந்தப் பட்டியலில் சேருமா.?  அடுத்த முறை நண்பரை பார்க்கும் பொழுது இதைப் பற்றி கேட்கவேண்டும்.
 


 



புதன், 15 செப்டம்பர், 2010

வாழ்க்கை

என் காதலை சொல்லியபோது வீட்டிற்குள்
உள்நாட்டுப் போரே ஏற்பட்டது போன்ற ஒரு பிரமை

அப்பா கோபத்தில் எகிறி குதித்ததில்
வானத்திற்கும் பூமிக்குமான இடைவெளி
அதிகரித்துப் போனது

என் காதலின் உறுதி தெரிந்து என்
உடமைகளுடன் நானும் வெளியேற்றப்பட்டபோது
அம்மா கதறி அழுதாள்.

சங்கடத்துடன் வெளியே வந்து
காதலியை தேடி ஓடி 
உடனடியாகத் திருமணம் என்றேன்.

சற்று  தயங்கி பின்னர் ஒப்புக் கொண்டாள்

ஓடுகாலிகள் என்ற பட்டத்தை தாங்கி
வாடகைக்கு வீடு பிடித்து
சந்தோஷத்தை இழந்து குடி புகுந்தோம்

வருடம் ஒன்று உருண்டு விட்ட நிலையில்
என் மனைவி பிரசிவிக்கப் போகும்
குழந்தையைக்  காண அம்மாவும் அப்பாவும்
ஓடி வந்தனர்.

பிறக்கப்  போவது பேரனா பேத்தியா
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையில் விவாதம்

'ஒரு பேரனோ பேத்தியோ பொறந்துட்டா 
எல்லாத்தையும்  மறந்துடுவாங்க'  

பக்கத்துக்கு வீட்டுக்காரர் எப்பொழுதோ
சொன்னது நினைவுக்கு வந்தது.






  

திங்கள், 13 செப்டம்பர், 2010

பிரபஞ்சம்: அவசரக் காதல்

பிரபஞ்சம்: அவசரக் காதல்

இளமைக் கனவு

அவள் என் கரம் பற்றி  இழுத்துச் சென்று
என் கண்களை உற்று நோக்கி என்னை "காதலிக்கிறேன்" என்றாள்
என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
வார்த்தைகளில் நிரப்ப முடியாத சந்தோஷம்.
என் சம்மதத்தை புன்னகையாக தெரிவித்தேன்.

பின் மீண்டும் அவளை சந்தித்தபோது
எப்போது திருமணம் என்றேன்
இரண்டு நாட்களில் என்றாள்.
மீண்டும் நான் வானத்தில் பறந்தேன்.

 சுற்றத்தார் சூழ மேள தாளத்துடன் மண்டபம் பரபரக்க
வெட்கத்துடன் அவள்
தாலியை  கையில் வைத்துக்கொண்டு நான்
அப்பா சட்டென்று என்னை உலுக்கி "மணி ஆவுது எழுந்திரு" என்றார்

நான் கடிகாரம் பார்த்தேன் மணி ஆறு
இது கனவா ?
பரவாயில்லை இருக்கட்டும் .
ஒரு சந்தேகம். இந்தக் கனவு பலிக்குமா?


 

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

அவசரக் காதல்

இன்று காலை அவளை பூங்காவில்
நடைப் பயிற்சியின் போது பார்த்தேன்.
பிடித்திருந்தது.
அவளிடம் சொன்னேன் 'ஐ லவ் யு '
பிறகு சொல்வதாய் சொன்னாள் அவள் முடிவை.
ஆனால் அன்று  மாலையே வந்தது அவள் 
சம்மதம் அலைபேசியில் குறுஞ்செய்தியாக 
அதற்குப் பிறகு இரண்டு வாரத்தில் திருமணம்.
மூன்றாம் மாதத்திற்குப் பின் காதல் கசந்தது.
எனக்கு அவளையும் அவளுக்கு என்னையும் பிடிக்கவில்லை
ஒற்றுமையாக விவாகரத்துக் கோரி
ஒரு வருடத்தில் பிரிந்தோம்.

  

திங்கள், 6 செப்டம்பர், 2010

காதலிக்கு கவிதை

 நேற்று படித்த கவிதை ஞாபகம்  வர சட்டென்று
என் காதலியிடம் கேட்டேன் "உன்னைப் பற்றி கவிதை சொல்லவா" என்று
அவளும் "ம்" என்றாள்  ஆர்வத்துடன்.
நான் தொடங்கினேன்

உன் முகம் முழு நிலவு போன்றது
புருவம் பிறை நிலா
கண்கள் மீன்களுக்குச்  சமம்
உன் பார்வையோ கதிர் வீச்சு
கழுத்து வெண் சங்கு போலுள்ளது
பற்களோ முத்து
சொற்களோ தேன்
மொத்தத்தில் உன் அழகுக்கு நிகரேது

முடித்துவிட்டு அவளையே பார்த்தேன்

அவள் என் தலை முடியை கோதிவிட்டு கூறினாள்
"ச்சீ போடா லூசு"
Related Posts Plugin for WordPress, Blogger...